நீங்கள் தோன்றியபோது நிகழ்ந்த அதிசயங்கள்!


இது  நீண்ட கட்டுரை , ஒரு அருமையான கட்டுரை .எல்லோரும் அறிந்துகொள்ளவேண்டிய கட்டுரை. படியுங்கள், உங்கள் கருத்தை பதியுங்கள்!
இந்த உலகில் உங்கள் முதல் இருப்பிடம் கருவறை. ஓர் உயிர் தனக்குள்ளிருந்து இன்னொரு உயிரைப் புதிதாக உருவாக்கித் தரும் அற்புத விஷயம்தான் மனிதப் பிறப்பு என்பது! அதில் நிகழும் அறிவியல் அதிசயங்கள் கொஞ்சநஞ்சமா? ஒரு சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஒரு சைக்கிள்  தயாரிக்கப்பட்டு வெளிவருவதற்கு என்னென்ன தேவை என்பதை யோசித்துப் பாருங்கள்...கச்சாப்பொருட்கள், பக்குவமான இயந்திரங்கள், உபகரணங்கள், திறன் மூலம், பணியாளர்கள், பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்தல், திட்டமிடுதல், கண்காணிப்பு, தரக்கட்டுப்பாடு என பற்பல இன்றியமையாத தேவைகள் இருப்பதை அறிவீர்கள். அதேவேளையில் புதிதாக ஓர் உயிர் உருவாவதற்கும் அதே உயிர் மீண்டும் ஒரு உயிரை உற்பத்தி செய்வதற்கும் பின்னால் என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா?



எண்ணற்ற ஜீவிகளை அவற்றின் பக்குவத்தோடும் நுணுக்கங்களோடும் ஆரம்பம் முதலே படைத்தது மட்டுமல்ல பக்குவமான முறையில் அவற்றின் இனப்பெருக்கத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவனின் படைப்பாற்றலைப் பற்றி வியக்காமல் இருக்கமுடியுமா?

= இறைவன்  எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன்29:19)
இவ்வுலகில் மனிதன் தோன்றியது முதல் இடையறாது நடந்துவரும் மனிதப் பிறப்பு என்ற பேரற்புதத்தின் பின்னால் நடப்பவற்றை சற்று சிந்தித்துப்பாருங்கள். இந்த மாபெரும் அற்புதத்தில் பங்குகொள்ளும் உறுப்புகளின் உருவாக்கமும் இயக்கமும் பரிபாலித்தலும் இன்ன பிற விந்தைகளும் படைத்தவன் ஒருவனின்றி நடந்துவிடுமா கூறுங்கள்! நமது ஒவ்வொருவரதும் உருவாக்கத்திற்கும்  பின்னால் அமைந்துள்ள இறை அற்புதங்களை அறியும்போது அவனுக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியுமா?

ஆண் உறுப்பு எனும் அதிசயம்: விரிந்து சுருங்கும் தன்மையுடைய மெல்லிய தசைகளும் ஏராளமான ரத்தக்குழாய்களும் உள்ளடக்கிய ஆண் உறுப்பு பாலுணர்வு நிறைந்திருக்கும்போது ரத்தம் பாய்வதால் விறைப்படைகிறது: உறவுக்குப் பின் பாலுணர்வு குறைந்ததும், இந்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைந்துவிடுவதால், பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறது.
இந்த உறுப்பின் மத்தியப் பாதைக்குச் சிறுநீர்க்குழாய் (Urethra) என்று பெயர். இது சிறுநீர்ப்பையில் இருந்து வருகிறது. இதன் ஆரம்பப் பகுதியில் விந்து ஏற்றக்குழாய்கள் இணைந்திருக்கும். இது சுமாராக15 வயது வரை சிறுநீரை மட்டுமே வெளியேற்றுகிறது. அதற்குப் பிறகு விந்துவை வெளியேற்றும் பாதையாகவும் மாறிவிடுகிறது. சிறுநீர் வெளியேறும்போது சிறுநீரும், விந்து வெளியேறும்போது விந்துவும் மட்டுமே வெளியேறும்படியான ஓர் ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது உடலியல் அதிசயங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று.
விதைப்பை : ஆணுறுப்பை ஒட்டிக் கீழ்ப்புறமாக ஒரு விதைப்பை(Scrotum) தொங்குகிறது. இதனுள்ளே இரண்டு விதைகள்(Testicles) உள்ளன. ஆண் பருவ வயதை அடைந்ததும் விந்தணுக்கள் உற்பத்தியாவது இங்குதான். ஆண்மையின் அடையாளமான மீசை வளர்வதற்குக் காரணமான டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை உற்பத்தி செய்வதும் இவைதான். வெப்பம், குளிர் போன்ற தட்ப வெப்பநிலைகளிலிருந்து விதைகளைக் காப்பது விதைப்பையின் முக்கிய வேலை.
விதைப்பையின் இரண்டு பக்கத்திலும் உள்ள விதைகளின் மேல் தளத்தில் தலா ஒரு விந்தணுக்குழாய் (Epididymis) உள்ளது. இவற்றிலிருந்து கயிறு போன்ற விந்துக்குழாய்கள் (Vasdeferens) அடிவயிற்றை நோக்கிப் புறப்படுகின்றன. இவை ‘புராஸ்டேட்’ (Prostate) எனும் ஆண்மை உறுப்பில் உள்ள விந்து ஏற்றக்குழாயில்(Ejaculatory duct) முடிகின்றன.
புராஸ்டேட் என்பது ஆண்களுக்கே உரித்தான ஒரு ஸ்பெஷல் சுரப்பி. இது சிறுநீர்ப்பையின் அடிப்பாகத்தில் இருக்கிறது. இதன் நடுவில் சிறுநீர்ப்பையில் இருந்து கிளம்பும் சிறுநீர்க்குழாய் செல்கிறது. விந்து ஏற்றக்குழாய்கள் இரண்டும் இந்தச் சிறுநீர்க்குழாயில் இணைந்து ஒன்றாகி, சிறுநீர் வெளித்துவாரத்தில் முடிகிறது.
உயிரணுவின் பயணம் : விதைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் ஒன்று சேர்ந்து அணி அணியாக விந்தணு குழாய்க்கு வந்து சேரும். பாலுறவின்போது வெளியேறுவதற்காக இவை இங்கு காத்திருக்கும். பாலுறவின்போது ஏற்படும் தசை இறுக்கங்களால், இவை அடிவயிற்றை நோக்கி, விந்து ஏற்றக்குழாய்க்கு உந்தப்படுகின்றன. சிறுநீர்ப்பைக்குப் பின்னால் விந்துக்கிடங்கு(Seminal vesicle)உள்ளது. விந்தணுக்கள் முதலில் விந்துக்கிடங்கு சுரப்போடும், பிறகு புராஸ்டேட் சுரப்போடும் கலந்து விந்து திரவமாக(Semen) மாறி, விந்து ஏற்றக்குழாய் வழியாக சிறுநீர்க்குழாயை அடைந்து, சிறுநீர் வெளித்துவாரத்தில்(Urethral orifice) வெளியேறுகிறது.
சிறுநீர்ப்பையின் அடியிலுள்ள சுருக்குத் தசைகள் பாலுறவின்போது இறுகுவதால், சிறுநீர்ப்பைக்கும் சிறுநீர்க் குழாயோடு விந்து ஏற்றக்குழாய்கள் இணையும் இடத்துக்கும் இடையில் உள்ள பாதை அடைத்துக்கொள்கிறது. இதன் பலனால், விந்து வெளியேறும்பொழுது அதனுடன் சிறுநீர் கலப்பது தடுக்கப்படுகிறது. அதுபோலவே, விந்து சிறுநீர்ப்பைக்குள் பின்னோக்கிச் செல்வதும் தடுக்கப்படுகிறது.
பெண் உறுப்புகள் எனும் பேரதிசயம் :

1. கருப்பை(Uterus):

 பார்ப்பதற்கு கருஞ்சிவப்பு நிறத்தில் மேற்புறம் பருத்தும், கீழ்ப்பகுதி சிறுத்தும் இருக்கும் முக்கிய உறுப்பு இது. கடுமையான தசைகளால் அமைந்த இந்த ‘வீட்டில்’தான் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருக்கும் கரு, முழுக்குழந்தையாக உருவெடுக்கும் அதிசயம் நடக்கிறது. விரிவாகச் சொன்னால்,கருப்பைக் குழி(Uterine cavity) என்று அழைக்கப்படும் இதன் உட்பரப்பு முக்கோண வடிவத்தில் இருக்கிறது. அதில் மெல்லிய சவ்வுப் படலம் (Endometrium) இருக்கிறது. இதில்தான் கரு புதைந்து வளர்கிறது. கருத்தரிக்காதபோது, இந்தச் சவ்வு விரிசல்விட்டு விலகி, கசியும்
ரத்தத்துடன் கலந்து மாதவிடாயாக வெளியேறுகிறது.

2. கருப்பை வாய் (Cervix):
கருப்பைக்கான உள்வாசல் இது; கருப்பையையும் ஐனனப் பாதையையும் இணைக்கிறது. முட்டையின் வெள்ளைக் கருபோல இங்கே சுரக்கும் ஒருவித  திரவம், பெண்களுக்குப் பாலுறவின் மீது ஈடுபாட்டை அதிகப்படுத்தவும், ஆணின் விந்தணுக்கள் வழுக்கிக்கொண்டு கருப்பைக்கு உள்ளே பாய்ந்து செல்லவும் வசதி செய்து தருகிறது.

3. சினைப்பைகள்(Ovaries):
கருப்பையின் இரண்டு பக்கமும் இருப்பவை சினைப்பைகள். குழந்தை உருவாவதற்குத் தேவையான சினைமுட்டையை(Ovum) மாதம் ஒன்று வீதம் இடது பக்கம், வலது பக்கம் என ஒன்று மாற்றி ஒன்றாக உற்பத்தி செய்து, கருக்குழாய்க்கு அனுப்பிவைக்க வேண்டியது சினைப்பையின் வேலை. இங்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள்தான் பெண்களின் கவர்ச்சிக்கு முக்கிய காரணமாகின்றன.

4. கருக்குழாய்கள் (Fallopian tubes):
கருக்குழாய்கள் கருப்பையின் இரண்டு பக்கமும் இருக்கின்றன; சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கின்றன. தலா 10 செ.மீ. நீளம் உள்ள இந்தக் குழாயின் மேல்முனையில்தான் சினைமுட்டையோடு ஆணின் விந்தணு கலந்து கரு உருவாகும் அற்புதம் நடக்கிறது

.5. ஜனனப் பாதை : வஜைனா(Vagina) எனப்படும் ஜனனப் பாதைதான் கருப்பைக்கான வெளிவாசல்!
குழந்தை பிறப்பின்போது கருப்பையிலிருந்து வெளிவரும் குழந்தையை இந்தப் பூமிக்குத் தருவதற்கு பயன்படும் முக்கிய வழியாக இது இருக்கிறது. இதன் நீளம் சுமாராக 8 செ.மீ. அகலம் 3 செ.மீ. இத்தனை சிறிய துளைதான் நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பிரசவத்தின்போது அகல விரிந்து பத்து மாதம் ஆன சிசுவுக்கு வழிவிடுகிறது.
கரு உருவாவது எப்படி?
ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து 12-வது நாள் முதல் 17-வது நாள் வரைமுக்கியமனவை. ஒரு பெண்ணின் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெடித்து வெளிவந்து, இந்த நாட்களில் ஏதாவது ஒருநாளில் கருக்குழாய்க்கு வந்து காத்திருக்கும். வெடித்து வெளிவந்த பின் இரண்டு நாட்களுக்குத்தான் அது உயிரோடு இருக்கும். அதற்குள் ஆணின் விந்துத்திரவம்வந்தடைந்தால்தான் விந்தணு சினைமுட்டையுடன் கலந்து கரு உருவாக முடியும்.
அப்போது ஆணின் விந்துத்திரவம் கருப்பை வாய்க்கு அருகில் கொட்டப்படும்போத இதில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுக்கள் எப்படியும் சினைமுட்டையை அடைந்தே தீருவது என்று தீர்மானித்து,அணிவகுத்துச் செல்லும் போர் வீரர்களைப்போல வீராவேசமாகப் புறப்பட்டு கருப்பைக்குள் நுழைவார்கள்.
கருப்பையின் உள் தூரம் 8 செ.மீ.வரை இருக்கும். நிமிடத்துக்கு சராசரியாக 2 மி.மீ.தூரம் என்ற வேகத்தில் நீந்திச் செல்வார்கள். பாதி தூரம் போனதும் பாதி வீரர்கள் களைப்படைந்து பயணத்தை நிறுத்திக்கொள்வார்கள். மீதிப் பேர்தான் பயணத்தைத் தொடர்வார்கள். இவர்கள் மட்டுமே மில்லி மீட்டரில் ஒரு பங்கு அளவே இருக்கும் சினைமுட்டையின் ‘கோட்டைக் கதவை’ மோதிப்பார்ப்பார்கள். ஆனால், ஏதாவது ஒருவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்து ‘கோட்டைக் கதவு’ திறந்து வழிவிடும்.
சினைமுட்டையை அதிர்ஷ்டக்கார ‘மாவீரன்’ துளைத்த மறுகணமே, முட்டி மோதும் மற்ற வீரர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க, சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிக் கோட்டைக் கதவைத் தாழ் போட்டு மூடிக்கொள்வது இன்னொரு அதிசயம்.
அந்த ‘மாவீரன்’  உயிரணுவின் வால் பகுதி சினைமுட்டையின் சவ்வுக்கு வெளியிலேயே நின்றுவிட,நீள்வட்ட தலை மட்டும் உள்ளே போகிறது. சினைமுட்டையில் நடுநாயகமாகக் காத்திருக்கும் அதன் உட்கருவோடு கலக்கிறது. இணையும் பொழுது, தன்னிடமுள்ள 23 நிறக்கோல்களையும் அவிழ்த்துக் கொட்டி விடுகின்றது. இந்த நிறக்கோல்களில் தந்தை வழி இறங்கக்கூடிய மரபு வழிப் பொருள்கள் யாவும் அடங்கியுள்ளன. ஒரு புதிய உயிர் கருவாக உருவாகும் அற்புதம் அங்கே அரங்கேறுகிறது!

= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?  நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)

= நிச்சயமாக நாம் மனிதனைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.. பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர்,அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். (திருக்குர்ஆன்23:12-14)

==============

கருவியலைத் திருத்திய குர்ஆன் வசனங்கள்

அறிவுலகின் தந்தை என்றும் கிரேக்கத் தத்துவ ஞானி என்றும் போற்றப்படும் அரிஸ்டாட்டில் (கி.மு. 384 & 322) கூட மாதவிடாய் இரத்தத்தில் இருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான் என்று கூறிக் கொண்டிருந்தார். இந்திரியத் துளியில் ஒழிந்திருக்கும் குட்டி மனிதன்தான் கருவறைக்குள் சென்று வளர்ந்து குழந்தையாக வெளியேறுகிறான் என்று ஒரு பிரிவினர் கூறிக் கொண்டிருக்க, மற்றொரு பிரிவினரோ அந்த குட்டி மனிதன் ‘சினை முட்டையில்’ தான் மறைந்திருக்கின்றான் என்று கூறிவந்தனர்.17ம் நூற்றாண்டு வரை கருவியல் கோட்பாடு இவ்வாறுதான் இருந்தது.

அறிவியல் வளர்ச்சி மனிதகுலத்தின் கண்களைத் திறந்துவிட புதுப்புது உண்மைகள் புலனாக ஆரம்பித்தன. மனித கருவியலைப் பொறுத்தவரையில் அல்குர்ஆன் மகத்தான பங்காற்றியது. மனித உருவாக்கம் தொடர்பான அல்குர்ஆன் வசனங்கள் அறிவியல் உலகின் திருப்பு முனையாயின. அதிலும் குறிப்பாக ‘அலக்’ எனும் பதம் கருவியல் உலகில் பெரும் புரட்சிக்கே வித்திட்டது.

திருக்குர்ஆன் அத்தியாயம் 23: 12-14 வசனங்களில் கீழ்கண்ட உண்மைகளை இறைவன் கூறுவதைக் காணலாம்:

1. நிச்சயமாக மனிதனை களி மண்ணின் மூலத்திலிருந்து நாம் படைத்தோம். பின்னர் பாதுகாப்பான ஓரிடத்தில், அவனை விந்தாக நாம் ஆக்கினோம்.
2. பின்னர், இந்த இந்திரியத்தை ‘அலக்’காக படைத்தோம்
3. பின்னர், அந்த அலக்கை தசைத் துண்டாகப் படைத்தோம்.
4. பின்னர், அந்தச் தசைத் துண்டை எலும்புகளாகப் படைத்தோம்.
5. பின்னர், அவ்வெலும்புகளுக்கு சதையை அணிவித்தோம்.
6. பின்னர், அவனை வேறொரு படைப் பாக (முழு மனிதாக) உண்டாக்கினோம்…..
(அல்குர்ஆன் 23:12&14)



ஆண் உயிரணுவும், பெண் சினை முட்டையும் சேர்ந்து ‘ஸைகோட்’ எனும் புதிய செல் உருவாகிறது. மனித கருவின் ஆரம்பம் இந்த ஸைகோட்டில் இருந்துதான் தொடங்குகிறது. ‘கலப்பு இந்திரியத்திலிருந்து நாம் மனிதனைப் படைத்தோம்’ என்று கீழ்கண்ட வசனம் குறிப்பிடுவது இதனைத்தான்.

= (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.  (திருக்குர்ஆன் 76:2)

அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டு சுமார் 1300 ஆண்டுகளுக்குப் பிறகு கருவியலில் ‘கலப்பு இந்திரியம்’என்ற கட்டம் இருப்பதாக ஹெர்ட்விக் என்பவரால் 1875ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

‘கலப்பு இந்திரியம்’ தன்னுடைய பலவித பரிமாணங்களுடன் கருவின் குழாய் வழியாக கருவகத்தை நோக்கி திரவப் பந்தின் வடிவமைப்பைப் பெற்று நகர்கிறது. அப்போது அதன் ‘செல்கள்’ பன்மடங்காகப் பெருகுகின்றன. இருந்தாலும் கூட கற்பப் பையின் உள்வரிச் சவ்வில் தன்னைப் பதித்துக் கொள்ளும் வரை திரவப் பந்தின் வடிவத்தையே கொண்டிருக்கின்றது.

இதைத் தொடர்ந்து ‘கலப்பு இந்திரியம்’ என்ற நிலையிலிருந்து ‘அலகா’ எனும் புதிய நிலைக்கு மாறுகிறது.

‘அலக்’ என்பது என்ன?

‘அலக்‘ என்பது ‘அலகா’ எனும் வார்த்தையின் பன்மைச் சொல்லாகும். அலகா என்பதற்கு மூன்று பொருள்கள் உள்ளன. அந்த மூன்று பொருள்களும் ‘அலகா’வின் நிலைக்கு பொருந்திப் போவது இறைவனின் வல்லமையையும் நுண்ணறிவையும்  நினைவூட்டுகின்றன. திருக்குர்ஆன் வசனங்கள் அறிவியல் வல்லுனர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

1. பற்றிப் பிடித்து தொங்குதல் (Implantation): நீர்த் துளி வடிவில் உள்ள கலப்பு இந்திரியம் ஏழாவது நாளில் கருப்பையினுள் நுழைகிறது. கருப்பையினுள் ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து அதன் உள்வரிச் சவ்வில் தன்னை ஆழப்பதித்து, தொங்கத் தொடங்குகிறது.

2. இரத்தம், கருஞ்சிவப்பு இரத்தம், உறைந்த இரத்தம்: தொங்கிக் கொண்டிருக்கும் கரு, அதன் மூன்றாவது வாரத்தின் இடையே இரத்தத்தால் நிரப்பப்பட்டு, மூடப்பட்டுள்ள நாளங்களைக் கொண்டதாக உருமாறுகிறது.

3. அட்டைப்பூச்சி : குளங்களில் வாழ்ந்து உயிர்ப் பிராணிகளைப் பற்றிப்பிடித்து, அதன் இரத்தத்தை உட்கொள்ளும் அட்டைப் பூச்சியோடு, நிரப்பப்பட்ட இரத்த நாளங்களுடன் தொங்கிக் கொண்டிருக்கும் கரு,அதன் மூன்றாவது வார இறுதியில், தோற்றத்திலும் இரத்தத்தை உறிஞ்சும் போது பிராணிகளை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொள்வதிலும் முழுமையாக ஒத்துப் போகிறது.

வெளித் தோற்றத்தில் அட்டைப் பூச்சியைப் போன்றும், உட்புறத்தில் இரத்தம் நிரப்ப்பட்ட நாளங்களைக் கொண்டதாகவும் இருக்கும் ‘அலகா’ கருவறையில் தன்னை ஆழப்பதித்து தொங்கிக் கொண்டிருகின்றது என்பதுதான் அலகாவின் முழுமையான விளக்கமும் பொருளுமாகும்.

கிருத்துவ மதத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் டாக்டர் கீத்மூர், மாரீஸ் புகைல், டாக்டர் ஜோ. லே ஸிம்சன் போன்றவர்களை திருக்குர்ஆனின் அற்புத வசனங்கள் வியப்பில் ஆழ்த்தின.

டாக்டர் கீத் மூர் மேற்கொண்ட ஆய்வுகள்

கனடாவில் டொரண்டோ பல்கலைக் கழகத்தில் உடற்கூறு துறைத் தலைவராகவும், கருவியல் துறைப் பேராசிரியராகவும் இருந்த டாக்டர் கீத் மூர் ‘அலக்’ எனும் ஒரு கட்டத்தை மனிதக் கரு அடைகிறது என அல்குர்ஆன் கூறுவதை அறிந்து வியந்து போனார்.

அது பற்றி விரிவாக ஆய்வு செய்த அவர், கருவின் படத்தை ஒரு அட்டைப் பூச்சியின் படத்துடன் ஒப்பிட்டு,கருவின் ஆரம்பத்தோற்றமும் அதன் செயல்பாடுகளும் அட்டைப்பூச்சியின் தோற்றமும் அதன் செயல்பாடுகளும் ஒரேவிதமாக இருந்ததைக் கண்டு வியந்து போன அவர், மேலும் இத்துறையில் தொடர்ந்து ஆய்வுகள் செய்யலானார். ஏனெனில், ஆரம்ப நிலைக்கரு அட்டைப் பூச்சிபோன்றதென இதற்குமுன் கீத்மூர் அறிந்திருக்கவில்லை. இது இத்துறையில் அவரை மேலும் ஆயுவுகள் செய்யத் தூண்டியது.

விலங்கியல் துறைக்குச்சென்று அட்டைப் பூச்சியை எடுத்து வந்து மனிதக் கருவுக்கு ஒப்பிட்டுக் காட்டினார். இரு போட்டோக்களையும் வெளியிட்டு அல்குர்ஆன் வாயிலாக தான் அறிந்த உண்மையை உலகுக்கு தெரிவித்து மகிழ்ந்தார்.

அரபியரிடத்தில் ‘அலக்’ என்பதின் பொருள் உறைந்த இரத்தம் என்பதாகும் என்று அவரிடம் கூறப்பட்டபோது டாக்டர் கீத் மூர் திகைத்துவிட்டார். ‘குர்ஆனில் சொல்லப்பட்டது கருவின் வெளித் தோற்றத்திற்கான நுட்பமான வர்ணனையாக மட்டும் அல்ல! மாறாக கருவின் உட்புற உருவாக்கத்திற்கான தெளிவான வர்ணனையாகக் கூட இருக்கிறது. ஏனெனில் ‘அலக்’ உடைய கட்டத்தில் நுட்பமான நாளங்களில் இரத்தமானது மூடப்பட்டதாக அமைந்திருக்கின்றது என்றார்.

கனடா நாட்டு நாளேடுகளின் தலைப்புச் செய்தி யாகவே இது இடம் பெறலாயிற்று. அதில் ஒரு நாளேடு‘பழங்காலப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஆச்சரியப்படத்தக்க செய்தி’ என்று தலைப்பிட்டிருந்தது.

மனிதக் கண்களால் நேரடியாக காண முடியாத அளவுக்கு கருவின் ஆரம்பத் தோற்றங்கள் மிக நுட்பமானவை. மைக்ரோஸ்கோப் உதவியுடன்தான் ஒருவர் இவற்றைப் பார்க்க முடியும். சுமார் 200வருடங்களுக்கு முன்புதான் இக்கருவி கண்டுபிடிக் கப்பட்டது.

கருவளர்ச்சி குறித்து நம் கண் முன்னே உள்ள சிலேடுகளும் படங்களும் ஆகிய அனைத்துமே மைக்ரோஸ்கோப் உதவியுடன் படம் பிடிக்கப் பட்டவை. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கரடு முரடான அறுவை சிகிச்சை செய்து கருவின் வளர்ச்சிப் படிகளை ஒருவர் காண முயன்றிருந்தால் கூட, அவற்றை அவரால் கண்கூடாகப் பார்த்திருக்க முடியாது என்றார் டாக்டர் கீத் மூர்.

கரு வளர்ச்சியின் படித்தரங்களின் விளக்கங்களை இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்  அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அதற்கு சாத்தியமே இல்லை. ஏனென்றால் கரு படிப்படியாக உருவாக்கப்படுகிறது என்பதை அன்றைய முழு உலகமும் அறிந்திருக்கவில்லை என்றார்.

அதனைத் தொடர்ந்து அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் கருவியல் தொடர்பாக சுமார் 80 விஞ்ஞான உண்மைகளைத் திரட்டினார். தான் ஏற்கனவே எழுதி வெளியிட்டிருந்த கருவில் உருவாகும் மனிதன் எனும் நூலில் இத்தகவல்களை இணைத்து அதன் மூன்றாம் பதிப்பாக 1982ல் வெளியிட்டார். மருத்துவத் துறையில் மிகச் சிறந்த நூல் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்த அந்த நூல், கருவியல் துறையில் முக்கியப் பாடநூலாக முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு பயன்படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கது.

1981ல் சவூதி அரேபியா, தம்மாமில் நடந்த ஏழாவது மருத்துவ மாநாட்டில் ‘அல்குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதற்கும் ‘அலக்’ ஒரு மகத்தான அத்தாட்சி என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

=========== 

நன்றி : திருக்குர்ஆன் நற்செய்தி மலர்

ஆக்கம் : திருக்குர்ஆன் நற்செய்தி மலர் 

Comments