கருப்பையும்... கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளும்....!


கருப்பையும்... கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளும்....!
மனித உறுப்புகளில் மகத்துவம் நிறைந்தது, கருப்பை. பெண் இனத்திடம் மட்டுமே இருக்கும் ஆக்க சக்தியின் அற்புதம் இது!

கிட்டத்தட்ட முக்கோண வடிவத்தில் மேல் பகுதி விரிந்தும், கீழ் பகுதி குறுகியும் காணப்படுகிறது. 8 முதல் 9 செ.மீ. நீளம் கொண்டது. கருப்பையின் வாய்ப் பகுதி பெண் உறுப்பில் இருந்து தொடங்குகிறது. கரு தங்குவதற்கு முன்னால், கருப்பையை தொட்டுப்பார்த்தால் நமது மூக்கைத் தொட்டால் எப்படி இருக்குமோ அதுபோல் சற்று கடினமாகத் தெரியும். கரு தங்கி வளரத் தொடங்கிய பின்பு தொட்டுப்பார்த்தால் நமது உதடுகளைத் தொடுவது போன்று மென்மையாக உணர முடியும்.


கருப்பை தசைகளால் ஆனது. அதன் உள்ளே ரத்தக் குழாய்களால் ஆன மெத்தை போல் எண்டோமெட்ரியம் உள்ளது. சினைப் பையில் இருந்து சினை முட்டை முதிர்ந்து- வெடித்து- வெளியேறி கருக்குழாயில் உயிரணுவை சந்தித்து, அங்கேயே கருவாகி, அது சில ரசாயனங்களை வெளிப்படுத்தும். அந்த ரசாயன மாற்றங்களால் கரு நகர்ந்து, 5-வது நாள் கருப்பைக்குள் சென்று, அங்கேயே ஒட்டி வளரத் தொடங்கிவிடும். கருவை வளர வைப்பது எண்டோமெட்ரியத்தின் வேலை. முதலில் சிறிதாக இருக்கும் எண்டோமெட்ரியம், பின்பு வளர்ந்து 9 மி.மீ. அளவை எட்டும்.

வயதுக்கு வந்த எல்லா பெண்களுக்கும் மாத விலக்குக்கு முந்தைய நாள்வரை எண்டோமெட்ரியம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். உடலுறவு நிகழ்ந்து உயிரணு சென்று- சினை முட்டையும் வெளியேறி வந்து- இரண்டும் சந்தித்து கருவாக்கத்திற்கான செயல்கள் நிறைவேறா விட்டால் இந்த எண்டோமெட்ரியத்திற்கு கருப்பைக்குள் வேலையில்லை. அதனால் அது வெடித்து வெளியேறும். இதுதான் மாத விலக்கு உதிரம். (கருவாக்கம் நிகழ்ந்தால் எண்டோமெட்ரியம் கருவை வளர்க்கத் தொடங்கிவிடும்) மாதவிலக்கு உதிரம் 200-300 மி.லி. அளவில் 2-3 நாட்களாக வெளியேறிக் கொண்டிருக்கும்.

'மாதவிலக்கு காலத்தில் தம்பதிகள் உறவு வைத்துக்கொண்டால் ஜன்னி வந்துவிடும்' என்ற கருத்து தவறானது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளால் செக்ஸ் உணர்வு மிகுதியாகும். அப்போது செக்ஸ் வைத்துக் கொள்வது பெண்களுக்கு மகிழ்ச்சியை தருவதோடு, அந்த நேரத்தில் சுரக்கும் என்டார்பின் ஹார்மோன் வலி நிவாரணியாக மாறி, மாத விலக்கு கால வலியையும் குறைக்கும். அதனால் கணவன், மனைவி இருவரும் விரும்பினால், சுகாதாரமான முறையில் உடலுறவை மேற்கொள்ளலாம். (மாதவிலக்கு கால உறவால் கர்ப்பம் ஏற்படாது)

மாதவிலக்கு உதிரப்போக்கு அதிக நாட்கள் தொடர்வதும், ஒரே நாளில் வந்து நின்று விடுவதும் குறைபாடுதான். சிகிச்சை மூலம் அதற்கு உடனடியாக தீர்வு கண்டிட வேண்டும்.

கருப்பை வளரும் தன்மை கொண்ட திசு. உள்ளே தங்கும் கரு வளர வளர கருப்பையும் வளரும். இரண்டு, மூன்று குழந்தைகளை தாங்கும் சக்தியும் அதற்கு இருக்கிறது. கரு, திசுவாகி- குழந்தையாக வளர்ந்த பின்பு கருப்பைக்குள் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், அதனை சுருங்கவைத்து குழந்தையை வெளியே தள்ளுகின்றன. இதுவே பிரசவத்திற்கான தூண்டுதலாகும்.

கருப்பையில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

* எண்டோமெட்ரியம் பாதித்து கருப்பையில் காச நோய் தோன்றலாம்.

* தாய் வயிற்றுக்குள் இருக்கும்போதே பெண் சிசுவுக்கு கருப்பை உருவாகி விடும். முதலில் அது மாட்டுக்கொம்பு போல் இரண்டு டியூப் ஆக உருவாகி, வளர்ந்து இணையும். அதன் உள்ளே பள்ளமான பகுதியும் தோன்றும். ஒரு பக்கம் மட்டும் மாட்டுக்கொம்புபோல் வளர்ந்திருந்தாலோ, போதுமான வளர்ச்சியின்றி இருந்தாலோ, அளவில் சுருங்கி பிறவியிலேயே குறைபாட்டுடன் இருந்தாலோ அது பாதிப்பிற்குரிய அம்சமாகும். இத்தகைய பாதிப்பு கொண்ட பெண்களுக்கு திருமணமாகி, குறைவற்ற முறையில் உடலுறவு நிகழ்ந்தாலும் தாய்மையடைய முடியாத சூழல் ஏற்படும்.

* கருப்பையின் வாய் எப்போதும் மூடியிருக்க வேண்டும். உயிரணு அதன் உள்ளே செல்லவும்- திரவம் வெளியே வரவும் மட்டும் வழியிருக்க வேண்டும். அதற்கு மாறாக கருப்பை வாய் திறந்திருந்தால் கரு உள்ளே தங்காமல், கலைந்து வெளியேறி விடும்.

* கருப்பையில் பைப்ராய்ட் போன்ற கட்டிகள் உருவானாலும் கருப்பை பாதிக்கப்பட்டு, தாய்மை தள்ளிப்போகும்.

* கருப்பை புற்றுநோய் தோன்றலாம்.

* கருப்பை வாயில் 'பாலிப்' எனப்படும் கட்டிகள் தோன்றலாம்.

பெண்களுக்கு தாய்மை தள்ளிப்போகும்போது கருப்பையில் பாதிப்பு ஏதாவது இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான நவீன சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

பின்குறிப்பு: மாதவிலக்கு காலத்தில் பெண்களை தனிமைப்படுத்தி எந்த பொருளையும் தொடக்கூடாது என்று ஒதுக்கிவைக்கும் நிலை இப்போதும் சில இடங்களில் இருக்கிறது. மனிதன் முதலில் காட்டுக்குள்தான் வாழ்ந்தான். அப்போது மனிதனைச் சுற்றி காட்டுமிருகங்கள் நிறைய இருந்தன. சிங்கம், புலி போன்றவைகள் மனிதனின் ரத்தவாடையை 2 கி.மீ. தூரத்தில் இருந்துகூட கண்டுபிடித்து, அங்கு மனிதன் இருப்பதை உணர்ந்து, தேடி வந்து தாக்கி விடும். அதனால் மாதவிலக்கு நாட்களில் பெண்களை தனிமைப்படுத்தி பாதுகாப்பான குகை மற்றும் உயரமான மரங்களில் வைத்தார்கள். இப்போது பாதுகாப்பான உலகில் பெண்கள் வாழ்வதால், மாதவிலக்கு காலத்தில் அவர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.


Comments